ஷா ஆலாம், பிப்ரவரி.19-
எட்டு சீனப் பிரஜைகளிடம் 50 ஆயிரம் டாலர் மதிப்பிலான சுமார் 2 லட்சம் ரிங்கிட் கிரிப்டோகரன்சியை மிரட்டிப் பறித்த புகாரில், 12 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை சிலாங்கூர் போலீஸ் துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கூட்டுக் கொள்ளை மற்றும் ஆயுதங்களுடன் கூடிய கொள்ளை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"குற்றச் செயல்கள் அல்லது ஒழுங்கீனங்களில் ஈடுபடும் எந்தவோர் அதிகாரி அல்லது போலீஸ்காரர்களுடன் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்," என்று ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்த விவரங்களை அவரது அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.
காஜாங், கன்றி ஹைட்ஸில் உள்ள ஒரு வாடகை பங்களாவில் தங்கியிருந்த சீனப் பிரஜைகள் மீது, மோசடி புகாரின் பேரில் சோதனை நடத்திய போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்தவர்கள் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க கிரிப்டோகரன்சியை மாற்றுமாறு அவர்களை போலீசார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் மத்திய வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட சீனப் பிரஜைகள் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் சார்லஸ், இச்சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் ஆகியும் போலீஸ் தரப்பிலிருந்து முறையான தகவல்கள் கிடைக்கவில்லை என அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.








