கோலாலம்பூர், பிப்ரவரி.10-
மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையைப் போலீசார் முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளனர். இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க ஏதுவாக, சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளின் அறிக்கைக்காகவும், சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தின் அடுத்தகட்ட உத்தரவுக்காகவும் தாங்கள் காத்திருப்பதாகப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐஜிபி, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக போலீஸ் துறை, தங்கள் தரப்பில் விசாரணையை முடித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.
தற்போது தொழில்நுட்ப ரீதியிலான அறிக்கைகளுக்காகக் போலீஸ் துறை காத்திருக்கிறது. இதில் முன்னேற்றம் ஏற்படும்போது அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
அலோர் காஜாவில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவமும், டுரியான் துங்கால் சம்பவமும் ஒரே மாதிரியான பாணியில் இருப்பதாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய அவர், இவ்விரு சம்பவங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பரில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். மலாக்கா மருத்துவமனையின் நோயியல் அறிக்கை மற்றும் மலேசிய ரசாயத்துறையின் தடயவியல் அறிக்கை ஆகிய இரண்டு முக்கிய ஆவணங்களுக்காகப் போலீசார் காத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.








