ஜார்ஜ்டவுன், மார்ச்.06-
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை அருகே ஒரு கோயிலுக்கு முன்பாகத் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படும் சட்டவிரோதப் போராட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது தயவு தாட்சணமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
Operasi Terjahan Rumah Anutan Haram' என்ற பெயரில் நாளை சனிக்கிழமை நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த சட்டவிரோதப் போராட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக் குழுவுடன் நடத்தப்பட் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்த பேராட்டம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக டத்தோ அஸிஸி குறிப்பிட்டார்.
போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும், யாராவது பொதுமக்களைத் தூண்டிவிடும் நோக்கில் அங்கு ஒன்று கூடினால் அல்லது ஊர்வலம் சென்றால், அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலோ அல்லது வதந்திகளைப் பரப்பும் வகையிலோ பதிவுகளை இடுபவர்கள் மீது 'சைபர் சட்டத்தின்' கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை வளாகம் என்பது நோயாளிகளுக்கான முக்கியமான இடம். அங்கு தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








