கோலாலம்பூர், பிப்ரவரி.06-
நாட்டின் மனிதவள மேம்பாடு மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையை -‘ திவெட்’ (TVET) வலுப்படுத்தும் நோக்கில், ஒரு புதிய சீர்திருத்தத்தை உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்திற்கு - ‘பிடிபிகே’ (PTPK) கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோலாலம்பூர் ஸ்ரீ பசிபிக் விடுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தலைமை தாங்கினார். அவருடன் மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இணைந்து, இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான திட்டங்கள், அதற்கான வழிமுறைகளை வகுப்பது குறித்து விரிவாக விவாதித்தனர்.

வருங்காலத்தில் இந்த நிதி உதவி வெளிப்படையான முறையிலும், உரிய பயனாளர்களைச் சென்றடைவதையும் உறுதிச் செய்வது இக்கூட்டத்தின் நோக்கமாகும்.
இந்தக் கூட்டத்தில் மனித வள அமைச்சின் - ‘கெசுமா’ (KESUMA) தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் பின் முகமட் யூசோப் உட்பட அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிதி ஒதுக்கீட்டு வழிமுறைகளைத் திட்டமிடல்
‘பிடிபிகே’ கழகத்திற்குத் தேவையான கூடுதல் நிதியைப் பெறுவதற்கான முறையான வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் அந்த நிதி கிடைத்தவுடன் அதனைத் திட்டமிட்டபடி விநியோகிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாக விளங்கின.

‘திவெட்’ பயிற்சி விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு
இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்களிடையே தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அதிக அளவில் கொண்டு சேர்ப்பதன் மூலம் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் ஹமிடி, மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் எடுக்கப்படும் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நிலையான மனித வள மேம்பாட்டிற்கும் பெரும் துணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.








