பினாங்கு ஜார்ஜ்டவுனில் உள்ள ஜாலான் பெங்காலான் வெல்ட் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து வணிக வளாகங்கள் சேதமடைந்தன. எனினும், அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க படகுத்துறையான சியூவ் தீயில் இருந்து தப்பியது.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட தீ, வாகன மற்றும் மரச்சாமான் பணிமனை, அச்சகம், பழைய பொருட்கள் விற்பனைக்கடை உள்ளிட்ட வளாகங்களை சேதப்படுத்தியதுடன், நான்கு வாகனங்களும் பாதிக்கப்பட்டன.
தீயணைப்புப் படையினருக்கு அதிகாலை 1.08 மணிக்கு தகவல் கிடைத்த நிலையில், மூன்று நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்த வீரர்கள், இரண்டு மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மூன்று தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 25 அதிகாரிகளும், 18 தன்னார்வப் படைகளைச் சேர்ந்த 143 தீயணைப்பு வீரர்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோவ், ஜார்ஜ்டவுனின் முக்கிய பாரம்பரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சியூவ் படகுத்துறை எந்தச் சேதமுமின்றி தப்பியதாக உறுதிப்படுத்தினார்.








