கோலாலம்பூர், ஜனவரி.14-
புக்கிட் டாமான்சாராவிலுள்ள ஹெல்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த வெடிச் சம்பவத்தில் படுகாயமடைந்த முதலாமாண்டு சட்ட மாணவி ரியா கவுர் தண்டாலுக்கு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
தலையில் பல இடங்களில் எலும்பு முறிவு மற்றும் மூளையில் இரத்தக் கசிவுடன், 19 வயதான ரியா, சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்த இந்த வெடிச் சம்பவத்தில், ரியா மட்டுமே படுகாயமடைந்த நபர் ஆவார்.
இந்நிலையில், தங்கள் மகள் மிகுந்த துணிச்சல்மிக்கப் பெண் என்றும், நடந்த சம்பவத்தை தங்களால் இப்போதும் நம்ப முடியவில்லை என்றும் ரியாவின் பெற்றோர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில், ரியா அங்கு இருந்தது துரதிஷ்டவசமானது என்று அவரது தந்தை ரவின் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த 24 வயதான சூ யு ஜுவான் என்ற இயந்திரவியல் துறை மாணவர், தனது மூன்று மாத தொழிற்துறைப் பயிற்சியை இன்றுடன் நிறைவு செய்திருக்க வேண்டியவர் என்று கூறப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தின், 4-வது தளத்திலுள்ள உணவகத்தின் காம்ப்ரஸர் அறையில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து, விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ஹெல்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.








