கோலாலம்பூர், பிப்ரவரி.16-
ஆயுதப்படைகள் தொடர்பான இரகசிய தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இவ்விசாரணைகளை தற்காப்பு அமைச்சு நடத்தவில்லை என்றும், போலீசார் நடத்தி வருவதாகவும் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றில் காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், ஆயுதப்படைகளின் வியூக விவகாரங்கள் தொடர்பான இரகசியத் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பும் எந்த ஒரு தரப்பினர் மீதும் கடுமையான சட்ட நடிவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது 1972 ஆம் ஆண்டு, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், 1972 ஆம் ஆண்டு ஆயுதப்படைச் சட்டம் அல்லது 1993 ஆம் ஆண்டு பொது அதிகாரிகள் (நடத்தை மற்றும் ஒழுக்கம்) விதிமுறைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எடுக்கப்படவுள்ளது.
மேலும், ஆயுதப்படை அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளானது மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பதோடு, ஆயுதப்படை மன்றத்தின் ஆலோசனையின் பேரில் அவை முடிவெடுக்கப்படும் என்றும் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.








