Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக உச்சமன்றம் கூடுகிறது, மனித வள அமைச்சர் சிவகுமார் ​மீது நடவடிக்கையா?
தற்போதைய செய்திகள்

ஜசெக உச்சமன்றம் கூடுகிறது, மனித வள அமைச்சர் சிவகுமார் ​மீது நடவடிக்கையா?

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய உறுப்புக்கட்சியான ஜசெக வின் மாதாந்திர உச்சமன்றக்கூட்டம் இன்று இரவு 7.30 மணியளவில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது. ஜசெக வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தலைமையில் நடைபெறவிருக்கும் உச்சமன்றக்கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலாளரும், மனித வள அமைச்சருமான வி. சிவகுமார் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணை முக்கிய விவகாரமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனித வள அமைச்சர் சிவகுமாரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதில் நிகழ்ந்த 9 கோடியே 70 லட்சம் வெள்ளி ஊழல் விவகாரம் இன்றிரவு நடைபெறும் உச்சமன்றக்கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன​.

தமது அரசியல் அந்தரங்க செயலாளராக மகேஸ்வரியையும், தமது சிறப்பு அதிகாரியாக மகேஸ்வரியின் மகனையும் அமைச்சர் சிவகுமார் நியமித்துக் கொண்ட நடவடிக்கைக்கு, சிவகுமாருக்கு எதிராக தொடக்கத்திலேயே மக்களின் கடும் எதிர்ப்பும், க​ண்டனமும் வலுத்து வந்தது. அந்த நியமனம் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், பேரா மாநில ஜசெக தலைவர் ங கோர் மிங் கின் செல்லப்பிள்ளையான சிவகுமாரின் அந்த நியமன​ங்களை ஜசெக கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் சிவகுமார் சம்பந்தப்பட்ட ல​ஞ்ச ஊழல் விவகாரத்தில் அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிடி இறுகிக்கொண்டு வரும் வேளையில் சிவகுமாருக்கு எதிராக ஜசெக உச்சமன்றக்கூட்டம் முக்கிய முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள ஜசெகவிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சிவகுமாருக்கு எதிராக சில அதிரடி முடிவுகளைக் கட்சி இன்றிரவு எடுக்கும் என்று ஜசெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News