குவாந்தன்,செப்டம்பர் 21-
சுற்றிலும் தீயை மூட்டி, நடுவில் தனது மகனை நிறுத்தி, கொளுத்தப் போவதாக மிரட்டிய ஆடவர், போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை மாரானில் கைது செய்யப்பட்ட 35 வயதுடைய அந்த நபர், போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் 12 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முகமது ஜஹாரி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர், தனது மகனை மிரட்டும் காட்சியைக் கொண்ட காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அந்த நபரின் நடவடிக்கைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.








