கோத்தா கினபாலு, பிப்ரவரி.25-
சபா மாநிலம் செம்போர்னாவில் சுற்றுலா விடுதி ஒன்றில், அதன் விருந்தினர்களுக்கு, எறும்புத் திண்ணி சூப் உள்ளிட்ட, அரிய வகை வனவிலங்குகளை உணவாக வழங்கியதாக எழுந்த புகார்களையடுத்து, அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை "Op Khazanah" என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை சபா வனவிலங்குத் துறை மேற்கொண்டதாக அதன் இயக்குநர் முஹமட் சோஃபியான் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
இச்சோதனையின் போது, சபா மாநில சட்டத்தின் கீழ் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட விலங்கினமாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஓர் உயிருள்ள சுந்தா வகை எறும்புத் திண்ணியை அமலாக்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மேலும், பல்வேறு பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இறைச்சிகளைக் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல உணவுகளுடன், எறும்புத் திண்ணியின் சூப் என்று நம்பப்படும் ஒரு உணவையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
தற்போது உலகில் அதிகளவில் கடத்தப்படும் பாலூட்டி இனமாக எறும்புத் திண்ணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், உலகளவில் அழிந்து வரும் உயிரினமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக 3 பேரைக் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.








