ஜொகூர் பாரு, ஜூலை 02-
மியன்மார் நாட்டின் அரக்கன் இனத்தைச் சேர்ந்த மக்களை இலக்காக கொண்டு அவர்கள் மலேசியாவில் தங்குவதற்கு ஐ.நா.வின் அகதிகள் அட்டைகளை போலியாக தயாரித்து வந்த ஒரு கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
மலேசிய குடிநுழைவுத்துறையினர் கடந்த வாரம் ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அந்த கும்பலைச் சேர்ந்த நால்வரை கைது செய்தனர் என்று ஜோகூர் மாநில இயக்குநர் முகமட் ருஸ்டி முகமட் தாருஸ் தெரிவித்தார்.
மியன்மார், அரக்கன் இனத்தைச் சேர்ந்த 26 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரில் மூவர் ஆண்கள் ஆவர். ஒருவர் பெண் என்று இன்று ஜோகூர்பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முகமட் ருஸ்டி குறிப்பிட்டார்.
இந்தக் கும்பல் பிடிபட்டது மூலம் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அரக்கன் இனத்தைச் சேர்ந்த 35 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவரை குடிநுழைவுத்துறையினர் மீட்டனர் என்று முகமட் ருஸ்டி மேலும் கூறினார்.








