கோலாலம்பூர், ஜனவரி.29-
மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் வணிக உறவை வலுப்படுத்துவதற்கான கூட்டு வணிகப் பங்களிப்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்யும் பயணிகளுக்குக் கூடுதல் விமானச் சேவைகள், எளிதான இணைப்புகள் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதே இக்கூட்டணியின் முக்கிய நோக்கமாகும். இதற்கான ஒப்புதலை மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் சிங்கப்பூர் பயனீட்டாளர் ஆணையம் ஆகிய அமைப்புகள் வழங்கியுள்ளன என்று பெர்னாமா கூறுகிறது.
இந்த ஒத்துழைப்பின் மூலம் இரு நிறுவனங்களும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் விமானச் சேவைகள், ஒருங்கிணைந்த விமான அட்டவணைகள் மற்றும் கூட்டு பயணக் கட்டணங்கள் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளன.
இது குறித்துப் பேசிய மலேசியா ஏவியேஷன் குரூப் மேலாளர் இஸாம் இஸ்மாயில் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி கோ சூன் போங் ஆகியோர், இந்தத் கூட்டணி இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.








