பினாங்கு, நவ.13-
கோலாலம்பூர், ஜாலான் இம்பியில் உள்ள ஒரு கொண்டோமினியம் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் நேற்று இரவு நான்கு கொள்ளையர்களை கோலாலம்பூர் போலீசார் சுட்டுக்கொன்ற வேளையில் பினாங்கில் கார் திருடுதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூவரை பினாங்கு போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இன்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நிபோங் திபால், பூலாவ் பூரோங், ஜாலான் சங்காட்டில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொள்ளையர்களுக்கும், போலீஸ்கார்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிக் சண்டையில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அகமட் தெரிவித்தார்.
இந்த மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டது மூலம் 40 லட்சம் வெள்ளி இழப்புக்கு காரணமான கார்கள் திருடுதல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகள் என 33 கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜார்ஜ்டவுன் மற்றும் தென் செபராங் பிறை மாவட்ட போலீசார் ஒருங்கிணைந்த நிலையில் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையில் 30 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய உள்ளூரைச் சேர்ந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது மூலம் இரண்டு கைத்துப்பாக்கிகள் இரண்டு வெட்டுக்கத்திகள் மற்றும கார் திருடுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை போலீசார் மீட்டுள்ளளர்.
கார்களை களவாடி, அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மூவரும் பினாங்கை இலக்காக கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று டத்தோ ஹம்ஸா அகமட் விளக்கினார்.








