மத்திய அரசாங்கம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பெர்ரி படகு சேவைகளுக்குப் புதிய எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ள போதிலும், பினாங்கு பெர்ரி சேவைக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு துறைமுக ஆணையத்தின் தலைவர் யோ சூன் ஹின், வெளியிட்ட அறிக்கையில், ஜார்ஜ் டவுன் மற்றும் பட்டர்வொர்த் இடையிலான படகு வழித்தடங்களில் எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என உறுதி அளித்துள்ளார். உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் இயக்கச் செலவுகள் அதிகரித்த போதிலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தச் சுமையைப் பயணிகள் மீது சுமத்தப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய கிழக்கு மோதல்களால் உயர்ந்து வரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுப் பயணிகளுக்கு 5 விழுக்காடு முதல் 18 விழுக்காடு வரை கூடுதல் கட்டணத்தை விதிக்க போக்குவரத்து அமைச்சு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








