குலிம் , ஜூலை 10-
கெடா,குலிம்,லாபு பெசார், கம்போங் பாடாங் உ பி எனும் பகுதியில், எலி மருந்து கலக்கப்பட்ட, நொறுக்குத் தீணியை உட்கொண்டதால், உயிருக்கு போராடிவந்த இரு உடன்பிறப்புகளில், ஒருவர் உயிரிழந்தார்.
பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த முஹம்மது அகில் ஸ்யுக்கி எனும் 3 வயது சிறுவன், இன்று காலை மணி 8.30 அளவில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, குலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் மோஹட் ஷீஸ்க்குள் மோஹட் கய்ரி தெரிவித்தார்.
அதே மருத்துவமனையில், அவரது தம்பியான 2 வயது முஹம்மது லூத் ஸ்யுக்கி -க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தங்கள் வீட்டின் அருகில் உள்ள, கொள்ளை ஒன்றில், திண்பண்டம் போல் காணப்பட்ட நொறுக்குத் தீனியை அவ்விருவரும் உண்டுள்ளனர்.
அதன் பின்னர், அவ்விரு சிறாரும் வாந்தி எடுத்ததோடு, வாயில் இருந்து நுரையும் வெளியானது; வலிப்பும் ஏற்பட்டது.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறாரின் தாயான 25 வயது நுறைந் ஹனோரிசல் எனும் மாது, அவ்விருவரையும் அருகில் இருந்த சுகாதார கிளினிக்குக்கு அழைத்துச் சென்ற போது, அவர்கள் உண்டிருந்த நொறுக்குத் தீனியில் நஞ்சு கலப்பட்டது கண்டறியப்பட்டது.
குரங்குகளைப் பிடிக்க, நஞ்சு கலக்கப்பட்ட அந்த திண்பண்டங்கள், சம்பந்தப்பட்ட கொள்ளையில் வைக்கப்பட்டிருந்தது, போலிஸ் மேற்கொண்ட தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தற்போது, குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பில் அலட்சியம் காட்டியது தொடர்பான சட்டம் ஆகியவற்றின் கீழ், போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.








