யு மொபைல் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 13-ஆம் தேதி முதல் அவரது பதவி நியமனமானது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யு மொபைல் நிறுவனத்தின் தோற்றுநர் வின்சென்ட் டான், கடந்த மார்ச் 12-ஆம் தேதி தலைவர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, துங்கு அமீனா புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வின்சென்ட் டான் இயக்குநர் வாரியத்தின் ஆலோசகராகப் பணியாற்றுவார் என்றும் யு மொபைல் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் டெலிமீடியா பிடிஇ எல்டிடி நிறுவனத்துடன் பங்கு விற்பனை ஒப்பந்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாவார் செத்தியா எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தின் பங்குகள் 50 விழுக்காட்டைக் கடந்துள்ள நிலையில், துங்கு அமீனா தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
டான் மற்றும் துங்கு அமீனா ஆகியோரால் நிறுவப்பட்ட முதலீட்டு நிறுவனமான 'மாவார் செத்தியா', தற்போது அத்தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கட்டுப்பாட்டுப் பங்கு வகிக்கிறது.
பல்வேறு துறைகளைச் சார்ந்த தனியார் நிறுவனங்களை வழிநடத்தியும், நிர்வாகக் குழுக்களில் இடம்பெற்றும், துங்கு அமீனா பரந்த அளவிலான தலைமைத்துவ மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்று 'யு மொபைல்' நிறுவனம் தெரிவித்துள்ளது.








