காஜாங்கில் உள்ள அரசு பயிற்சி மையம் ஒன்றில், விழுந்த மரத்தை அகற்ற முயன்ற 34 வயதுள்ள உள்ளூர் லேன்ட்ஸ்கேப் தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த புதன்கிழமை பெய்த பலத்த மழை மற்றும் காற்றினால் அரசு நிலத்தில் இருந்த மரம் ஒன்று அருகிலுள்ள கட்டுமானத் தளத்தின் வேலி மீது சரிந்து விழுந்தது. நேற்று மதியம் சுமார் 2.05 மணியளவில், செயின்சா கருவியைப் பயன்படுத்தி மரக்கிளைகளை வெட்டி அகற்றிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்சாரக் கம்பிகளில் மின்கசிவு ஏற்பட்டு அந்தத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் கட்டுமான வேலி மீது மின்கம்பிகள் தொங்கிக்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. ஒப்பந்ததாரர் முறையான அபாய மதிப்பீட்டை செய்யாததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து சிலாங்கூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மின்சார ஆணையமும் தொழில்நுட்ப அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கோரப்பட்டுள்ளது.








