கோலாலம்பூர், மார்ச்.07-
சுமார் 30 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 6 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ஃபெல்டா தலைவரும், முன்னாள் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசருமான ஈசா சமாட், அந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யவும், தனது மேல்முறையீட்டை மீண்டும் விசாரிக்கப் புதிய நீதிபதிகள் குழுவை நியமிக்கவும் அவர் கோரியுள்ளார். இயற்கை நீதி மீறப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் குழு இந்த மனுவில் சுட்டிக் காட்டியுள்ளது.
தற்போது 76 வயதாகும் ஈசா சமாட், கடந்த 2021-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் விதித்த 6 ஆண்டு சிறை மற்றும் 1 கோடியே 55 லட்சம் ரிங்கிட் அபராதத்தை எதிர்த்துத் தாக்கல் செய்த மேல்முறையீடு முன்னதாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர் தற்போது சுங்கை பூலோ சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இந்த புதிய மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.








