கோத்தா கினாபாலு, ஜூலை 9 -
சபா மாநிலத்தில் போதைப்பொருள், PISANG GORENG போன்று விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை மாநில போலீசார் மறுத்துள்ளனர். இப்படியொரு குற்றச்சாட்டு அதிகப் பட்சமானதாகும் என்று சபா மாநில போலீஸ் ஆணையர் டத்தோக் ஜௌதே டிகுன் தெரிவித்தார்.
சபா மாநிலத்தில் திரவக வடிவில் Syabu போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் முறையை மாநில போலீசார் வெற்றிகரமாக கண்டு பிடித்துள்ளனர். இதற்கு அப்பாற்பட்ட நிலையில் புள்ளிவிபரங்களின்படி போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இது போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடத்தல்காரர்களுக்கு எதிராக சபா போலீசார் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை காட்டுகிறது என்று டத்தோக் ஜௌதே குறிப்பிட்டார்.
தவிர இவ்வாண்டு முதல் ஆறு மாத காலத்தில் போதைப்பொருதுள் தொடர்பாக 8 ஆயிரத்து 993 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போதைப்பொருளுக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் படை கொண்டு இருக்கும் கடப்பாட்டை காட்டுவதாக உள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபா, கினபாதங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ பங் மொக்தார் ராடின், சபா மாநிலத்தில் போதைப்பொருள், Pisang Goreng போல் கிடைப்பதாக குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து சபா போலீசார் இந்த விளக்கத்தை தந்துள்ளனர்.








