ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.13-
வர்த்தகர் ஒருவர், தனது வியாபாரத் தளத்தில் ஜாலூர் கெமிலாங் கொடியை தலைகீழாகக் கட்டி விட்டார் என்பதற்காக கெப்பாளா பாத்தாஸ், பெர்தாமில் உள்ள அந்த வர்த்தகரின் கடையின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பேரணியில் மக்கள் திரள வேண்டாம் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் அறிவுறுத்தியுள்ளார்.
ஓரிட மக்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை உறுதிச் செய்யும் பொருட்டு, மக்கள் இந்த ஆட்சேபப் பேரணியில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்திய அவர், தேசியக் கொடி தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தகருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்துறை அலுவலகத்தின் முடிவுக்காகத் தாங்கள் காத்திருக்கும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சல்லே தலைமையில் அந்த கடையின் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் என்று அறியப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருப்பதை டத்தோ அஸிஸி உறுதிப்படுத்தினார்.
பொது அமைதிக்குக் குந்தகத்தை விளைவிக்கும் வகையில் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.








