ஜன.10
போலி டாக்டர் பட்டங்களை துடைத்தொழிப்பதற்கு அத்தகைய பட்டங்களை கொண்டு இருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் கூடுதல் அபராதம் விதிப்பது ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட நிலையில் அது தொடர்பான விழிப்புணர்வையும் சமூகத்தின் மத்தியில் அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு கல்விமானாகிய டாக்டர் ரா. சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டார்.
கல்வி சார்ந்த ஒரு மாண்புக்குரிய கெளரவ டாக்டர் பட்டத்தை போலி நபர்கள் தங்கள் பெயருக்கு முன்னாள் சுமந்துக்கொண்டு இருப்பது மூலம் நாட்டின் கல்வித் தரம் எத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கப்படும், இதனால் பல ஆண்டுகளாக கடும் உழைப்பை வழங்கி, ஆய்வியலில் ஈடுபட்டு, உண்மையான டாக்டர் பட்டத்தை பெறக்கூடியவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து விளக்கப்பட வேண்டும் என்று மூடா கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார்.
போலீஸ் துறை போன்ற அமலாக்கத் தரப்பினர், பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன் தங்களின் கண்காணிப்பையும், அமலாக்க நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துவது மூலம் போலி டாக்டர் பட்டங்களை வைத்திருப்பவர்களும், அந்த போலி பட்டங்களை பெறுவதற்கு தயாராகிக்கொண்டு இருப்பவர்களும் அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பயப்படக்கூடிய ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டார்.








