கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
நாட்டின் மேன்மை, மக்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு வரையப்பட்டுள்ள 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான வாக்கெடுப்பு, இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜுலை 30 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசத்திற்கு கட்டி எழுப்புதல் என்ற கருப்பொருளுடன் இறையாண்மை, சுயமாரியாதை, மக்களின் மாண்பு ஆகிய 3 முக்கியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு 13 ஆவது மலேசியத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் வேளையில், இந்த 13 ஆவது மலேசியத் திட்டத்திற்கு ஆதரவாக எளிய பெரும்பான்மை கிடைக்காமல் போகுமானால் சட்டப்பூர்வத் தன்மையை அரசாங்கம் இழந்து விடும் என்று பாசீர் கூடாங் பிகேஅர் எம்.பி. ஹசான் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் எளிய பெரும்பான்மை என்பது அரசாங்கத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனைப் பெறுவதறகு அரசாங்கம் தவறுமானால் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று ஒரு சட்ட நிபுணரான ஹசான் அப்துல் கரீம் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினரும், சுயேட்சை எம்.பி.க்களும் இந்தத் தீர்மானத்தை நிராகரிப்பார்களேயானால் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.








