தற்போது டீசல் மானியம் 'BUDI Individu' மற்றும் 'BUDI Diesel' ஆகிய திட்டங்களின் கீழ் நேரடி பணப் பரிமாற்றமாக வழங்கப்படுகிறது. இதனை மாற்றி, RON95 பெட்ரோலுக்குப் பயன்படுத்தப்படும் BUDI95 செயல் முறையைப் போலவே மிகவும் எளிமையான மற்றும் திறன் வாய்ந்த ஒரு முறைக்கு மாற்றுவது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இந்த புதிய முறை பொதுமக்களுக்கு, குறிப்பாக 'ஃபோர்-வீல் டிரைவ்' (4WD) அல்லது பிக்கப் டிரக் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் நிலையங்களில் நேரடியாகப் பலன் பெற மிகவும் எளிதானதாக இருக்கும் என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் டத்தோ ஃபஹ்மி குறிப்பிட்டார்.
டீசல் கடத்தல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், மானியம் தகுதியானவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லைப் பகுதிகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர் அபாயம் கொண்ட எரிபொருள் நிலையங்களில் கடத்தலைத் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சு, இது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த வாரம் நடைபெறும் தேசிய பொருளாதார நடவடிக்கை குழு கூட்டத்திலோ அல்லது அமைச்சரவைக் கூட்டத்திலோ தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீன்பிடித் துறைக்கு மட்டும் மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்துடன் ஆலோசித்து சற்றே மாறுபட்ட ஒரு மானிய முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பதையும் அரசாங்கப் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி விளக்கினார்.








