கோலாலம்பூர், பிப்ரவரி.18-
கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் பகுதியில் Multiracial Reverted Muslims அமைப்பின் பிரச்சாரக் கூடாரம், அனுமதியின்றி பாதசாரிகளுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தங்களுக்கு, முன்னறிவிப்பின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதை அதன் நிறுவனர் ஃபிர்டாவுஸ் வோங் கண்டித்ததுடன், அதிகாரிகளின் பாரபட்சமான அணுகுமுறையைச் சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தைக்கு டிபிகேஎல் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிர்டாவுஸ் வோங், தனது பிரச்சாரக் கூடாரம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி பறிமுதல் செய்யப்பட்டதை ஒரு கோயிலின் கட்டுமானத்துடன் ஒப்பிட்டுத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சாலையை மறைக்கும் அளவுக்கு இருக்கும் கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், சிறிய கூடாரத்தைப் பறிமுதல் செய்வது முரண்பாடாக இருப்பதாக அவர் சாடியுள்ளார். இந்தச் செயல் டிபிகேஏல்லின் அமலாக்க நடவடிக்கைகளில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் சமச்சீரற்றத் தன்மையைக் கேள்விக் குறியாக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.








