இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு சொந்தமான 3 லட்சம் வெள்ளியை மோசடி செய்ததாக வர்த்தக ஆலோசகர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
கோலாலம்பூரை சேர்ந்த 61 வயது பி. அன்பழகன் என்ற அந்த வர்த்தக ஆலோசகர் மித்ராவின் கல்விப்பயிற்சிப் பிரிவு உதவி இயக்குநரான ஆர். கவிதாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் உண்மையானவை என்ற நம்பவைத்து மித்ராவிற்கு சொந்தமான 3 லட்சம் வெள்ளியை மிக சாதுரியமாக கபளிகரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
ஹோங் லியோங் வங்கி கணக்கறிக்கை, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் உள்ள பெங்கேல் மோத்தோர் ஸ்திபேன் என்ற பெயரில் எட்டு ரசீதுகள் மற்றும் நான்கு பற்றுச்சீட்டுக்கள் ஆகியவற்றை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தேதியிடப்பட்ட மித்ரா அறிக்கையுடன் சேர்த்து வழங்கியதாக அன்பழகனுக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கபட்ட பின்னர் பெங்கேல் மோத்தோர் ஸ்திபேன் வங்கி கணக்கில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 047 வெள்ளியை சேர்ப்பிப்பதற்கு உதவி இயக்குநர் கவிதாவை தூண்டியதாக அன்பழகன் மீது இந்த மோசடி குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
அன்பழனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 15 குற்றச்சாட்டுகளையும் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கும் டிசம்பர் 3 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையில் மித்ரா அலுவலகத்தில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, பிரம்படித் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் அன்பழகன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான 15 குற்றச்சாட்டுகளையும் அன்பழகன் மறுத்து விசாரணை கோரியுள்ளார். இதனை தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் அன்பழகன் 20 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


