பகாங், குவந்தான், இந்திரா மக்கோத்தா பகுதியில் எரிவாயு குழாய் வெடித்ததாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விளக்கமளித்துள்ள பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் முகமட் சலாவுதீன் ஈசா, அது ஒரு தீயணைப்பு ஒத்திகை மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
"எக்ஸ்-இந்திரா" எனும் குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை, அவசரக் காலங்களில் பாதுகாப்புப் படைகளின் தயார்நிலையைச் சோதிக்கவே நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசாங்க ஏஜென்சிகள் பங்கேற்றன.
வீடியோவில் தெரிந்த கரும்புகை மற்றும் ஆம்புலன்ஸ் சத்தங்கள் அனைத்தும் ஒத்திகையின் ஒரு பகுதியே என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் விளக்கினார்.
கடந்த ஆண்டு புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த உண்மை விபத்தோடு ஒப்பிட்டுப் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.








