வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் மலேசிய சோசலிச கட்சியான பிஎஸ்எம், தனது ஒரே வேட்பாளராக அமீர் ஷஃபிக் அமீர் சுக்ரிவை ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் களம் இறக்குகிறது.
தேர்தல் செலவுகள் அதிகமாக இருப்பதால், தொழிலாளர்கள் மற்றும் வீடமைப்புப் பிரச்சினைகள் நிறைந்த வியூக நகர்ப்புறத் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொழிலாளர் உரிமை ஆர்வலரும், பிஎஸ்எம் ஜோகூர் மாநிலச் செயலாளருமான 40 வயது அமீர் ஷஃபிக், இங்கிலாந்தின் டீஸ்சைடு பல்கலைக்கழகத்தில் அனைத்துலக வணிக நிர்வாகப் பட்டம் பெற்றவர் என்பதோடு, விற்பனைத் துறையில் 15 ஆண்டு அனுபவமும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.








