கோல குபு பாரு, மே 11-
கோலகுபு பாரு இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரச பரிபாலனம், சமயம் மற்றும் இனம் சார்ந்த 3R விவகாரம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற இந்த இரண்டு வார காலத்தில் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் எந்தவொரு தரப்பினரும் 3 R விவகாரத்தை தொட்டு பேசியதாக புகார் பெறப்படவில்லை. ஆனால் இதர வகையான குற்றங்களுக்காக 12 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஐஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கி நேற்றிரவு 11.59 மணியுடன் முடிவடைந்த தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்காக மொத்தம் 190 பெர்மிட்டுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக டான் ஸ்ரீ ரசாருதீன் குறிப்பிட்டார்.








