நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாங் டி-பெர்துவான் பெசாராக துவாங்கு முஹ்ரிஸ் மட்டுமே நீடிப்பார் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மாநில ஆட்சியாளரை மாற்றவோ அல்லது நீக்கவோ முயலும் எந்தவொரு நடவடிக்கையும் நாட்டின் நிலைத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
புதிய ஆட்சியாளராக துங்கு நட்சருதீன் பிரகடனப்படுத்தப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பிரதமர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சர்ச்சை மற்றும் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்கு மத்தியில், இத்தகைய கருத்து வேறுபாடுகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல், சட்டபூர்வமான அரசியலமைப்பு செயல்முறைகள் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.








