கோலாலம்பூர், பிப்ரவரி.03-
மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம், இன்று செவ்வாய்க்கிழமை, சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர், செனட்டர் டாக்டர் ஸுல்கிஃப்லி ஹசானைச் சந்தித்து உரையாடினார்.
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இஸ்லாமிய சமய விவகாரங்கள் குறித்து, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் கூட்டரசு அளவில் இஸ்லாமிய போதனைகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து அரசருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இச்சந்திப்பில்,மலேசிய இஸ்லாமிய சமய மேம்பாட்டு துறையான ஜாக்கிம்மின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சிராஜுடின் சுஹைமி மற்றும் கூட்டரசுப் பிரதேசங்களுக்கான முப்தி, அஹ்மாட் பௌவாஸ் ஃபாட்சீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








