கெனிங்காவ், நவ.6-
சபா, Keningau மாவட்டத்தில் நாய் ஒன்றை கொடூரமாக அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். அன்றைய தினமே சமைத்து சாப்பிடுவதற்காக அந்த சந்தேகப் பேர்வழி, நாயை அடித்துக்கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மெக்கானிக்காக பணிபுரியும் 39 வயதுடைய ஓர் இந்தோனேசியரான அந்த நபரை விசாரணைக்கு ஏதுவாக நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
வாகனப்பட்டறையில் கனரக லோரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த நாயை இரும்புத்தடியினால் அந்த நபர் அடித்துக்கொல்லும் காட்சியை கொண்ட காணொளி ஒன்று, சமூக வலைத்தளஙகளில் வைரலாகியதைத் தொடர்நது அந்த நபரின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
காணொளியில் பதிவு செய்யப்பட்ட காட்சியைக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரை போலீசார் அடையாளம் கண்டதாக கெனிங்காவ் மாவட்ட போலீஸ் தலைவர் யம்பில் கெராய்i குறிப்பிட்டார்.
அந்த நபர், பின்னர் கெனிங்காவ், கம்போங் பாரியாவாவில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். குற்றவியல் சட்டம் 426 மற்றும் தொடர்புத்துறை, பல்லூடக சட்டத்தின் கீழ் அந்த நபரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு உதவும் வகையில் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுடன் தொடர்புகொள்ள போலீசார் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.








