கோலாலம்பூர், பிப்ரவரி.05-
மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, இந்தியச் சமூகத்திற்கான ஒரு லட்சம் ரிங்கிட் இலக்கு நிதியுதவித் திட்டத்தை இந்த ஆண்டு மீண்டும் செயல்படுத்தவுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் வாயிலாக இந்தியர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த ஒரு லட்சம் ரிங்கிட் நிதி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தகுதியான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உதவி நல்கப்படும்.
மித்ரா தற்போது மனிதவள அமைச்சின் கீழ் செயல்படுவதால், நிதி மேலாண்மையில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிச் செய்யப்படும் என டத்தோ ஶ்ரீ ரமணன் உறுதியளித்தார்.
கடந்த ஆண்டு ஆலயப் பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இது முறையாகத் திட்டமிடப்பட்டு, சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக மீண்டும் கொண்டு வரப்படுகிறது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.








