பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.14-
இந்த வட கிழக்குப் பருவமழையின் மூன்றாவது தீவிர அத்தியாயத்தின் காரணமாக, மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியா தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்குத் தொடர்ச்சியான கனமழைக்கான 'ஆரஞ்சு' நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மழைப்பொழிவு டிசம்பர் 13 முதல் 18 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கிளந்தான், திரெங்கானு, பகாங்கின் கிழக்குப் பகுதி, ஜோகூரின் கிழக்குப் பகுதி பாதிக்கப்படலாம் என மெட்மலேசியாவின் உதவி இயக்குநர் அம்பூன் டிண்டாங் தெரிவித்தார்.
வலுவான வட கிழக்குப் பருவமழைக் காற்றுடன், மணிக்கு 20 முதல் 35 knot வேகத்தில் அதிக ஈரப்பதத்தைக் கொண்டு வரும் இந்தக் காற்றின் காரணமாக, சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள், குறிப்பாக ஆற்றங்கரையோரமும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்பவர்கள், வானிலை எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, எந்த நேரத்திலும் வெளியேறத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








