கோலாலம்பூர், நவ. 16-
அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின்றி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் GANG TR என்று கூறி, சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது நியாயமற்ற செயலாகும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.
எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடாத நிலையில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தவர்கள், இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு, விசாணைக்கு பிறகு விட்டுவிடுவதாக கூறி, அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது சொஸ்மா சட்டத்தை பிரயோகித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அவர்கள் புரிந்த குற்றம்தான் என்ன, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுங்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் இன்று தஙகள் மனவேதனை தெரிவித்தனர்.
தங்களின் இரண்டு மகன்களும் சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தனித்து வாழும் தாயாரான மாது ஒருவர் தமது உள்ளக்கிடங்கில் கொட்டி வைத்துள்ள வேதனையை விவரித்தார்.
குண்டர் கும்பலின் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி, தனது கணவரை கைது செய்து கொண்டு சென்றவர்கள், சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது மூன்று நாட்களுக்கு பிறகே தெரியவந்ததாக நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான மற்றொரு மாது தெரிவித்தார்.
தம்முடைய வங்கி கணக்குகளையும் முடக்கிவிட்டதால், பிள்ளைகளை பராமரிப்பதற்கு சேமிப்புப்பணத்தைக்கூட எடுக்கமுடியாமல் பெரும் சிரமத்திற்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குண்டர் கும்பல் என்று கூறி பிடித்துச்செல்லப்பட்ட தனது சகோதரன், சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது மட்டுமின்றி அவர் மீது பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக கவியரசன் என்பவர் குற்றஞ்சாட்டினார்.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீதான வழக்கு விசாரணை எப்போது வரும் என்று தேதி கூட அறிவிக்கப்படாத நிலையில் தங்களின் வங்கி கணக்குகளையும் முடக்கி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பல்வேறு சிரமங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர் டி. ஹர்பால் சிங் குடன் கோலாலம்பூரில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர்.








