முன்னாள் நிதியமைச்சரான காலஞ்சென்ற துன் டாயிம் ஜைனுடின் மகன்கள் முகமது அமீர் மற்றும் முகமது அமீன் ஆகிய இருவருக்கு எதிராகக் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அனுப்பிய நோட்ஸை பின்பற்றி வாக்குமூலம் அளிக்கத் தவறியதால், அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று மாஜிஸ்திரேட்இல்லி மரிஸ்கா காலிசான் இந்த உத்தரவை வழங்கினார். துன் டாயிமின் மூன்றாவது மற்றும் நான்காவது மகன்களான இவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.
அவர்களது சகோதரி அஸ்னிடா நேற்று SPRM தலைமையகத்தில் முன்னிலையாகி ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த நிலையில், அவர்களின் மற்றுமொரு சகோதரரான முகமது வீரா தானியும் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








