இஸ்கண்டார் புத்ரி, பிப்ரவரி.23-
ஜோகூர் பாரு, இஸ்கண்டார் புத்ரியில் உள்ள சுல்தான் அபு பாக்கார் சுங்க, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி வளாகத்தில் குடிநுழைவுத் தடையை மீறி அதிவேகமாக சிங்கப்பூர் நோக்கிச் சென்ற கார் ஓட்டுநரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.40 மணியளவில் தஞ்சோங் குப்பாங்கில் உள்ள சோதனை சாவடி வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம்.குமரேசன் தெரிவித்தார்.
மலேசியப் பதிவு எண் கொண்ட கார் ஒன்று, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் Gate C நுழைவாயில் பகுதியில் உள்ள கனரக வாகனப் பாதையில் நுழைந்தது.
அங்கிருந்த துணைப் போலீசார், அந்த ஓட்டுநரை கார் பாதையில் செல்லுமாறு யூ-டர்ன் செய்யப் பணித்தனர். ஆனால், அந்த ஓட்டுநர் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
அதற்குப் பதிலாக, அவர் காரை வேகமாகச் செலுத்தி, குடிநுழைவு சோதனைச் சாவடியின் தடுப்புக் கம்பியையும் அங்கிருந்த நான்கு போக்குவரத்து கூம்புகளையும் மோதித் தள்ளிவிட்டு சிங்கப்பூர் வெளியேறும் பகுதியை நோக்கி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தியதற்காக அந்த நபர் தேடப்பட்டு வருவதாக ஏசிபி குமரேசன் தெரிவித்தார்.








