பூச்சோங், ஹீ லாய் டோன் உணவக மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை தீபாவளி தொண்டூழிய மதிய உணவு வழங்கும் நிகழ்வு, மூன்று ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த 85 சிறார்கள் மற்றும் பெரியவர்களுடன் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.
பூச்சோங் சமூக சேவையாளரான ரத்தினம், டத்தோ பத்மநாதன் என்ற சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீபாவளி குதூகலத்தை ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்தவர்களுடன் கொண்டாடும் நோக்கில் ஆடல், பாடல், விருந்தோம்பல் என்று சிறப்பு அங்கங்களுடன் நடத்தப்பட்டது. இதில் சுமார் 150 பேர் கலந்து சிறப்பித்தனர்.
Infinity Studio இன்னிசையின் பின்னணியில் நடைபெற்ற இந்த சிறப்பாக விருந்து உபசரிப்பில், மலேசிய சிறைச்சாலை இலாகாவின் பணிஓய்வுப் பெற்ற முன்னாள் உதவி இயக்குநர் அண்ணாதுரை காளிமுத்து, போலீஸ் உயர் அதிகாரி ஏஎஸ்பி இராஜன் கண்ணையா ஆகியோர் சிறப்பி விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் பார்வையிழந்த முருகா என்பவர் பாடிய தேனிசைத் தென்றல் தேவாவின் டாவு டாவு டாவுடா என்ற பாடல் பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் பாராட்டுகளை பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய சிறை இலாகாவின் முன்னாள் உதவி இயக்குநர் அண்ணாதுரை, இது போன்ற நிகழ்வுகளை அரசாங்க சார்பற்ற அமைப்புகள் மட்டுமே நடத்தும் என்று எதிர்பார்த்த வேளையில் இங்கே இரு தனி மனிதர்கள், கருணைமிக்க ஓர் அற்புதமான நிகழ்வை முன்னெடுத்து இருப்பது பாராட்டக்கூடியதாகும் என்றார்.
பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கும் பெற்றோர்கள் காட்டுகின்ற கண்டிப்பு போக்கே, அவர்களை உயர்த்தும். அந்த வகையில் இங்கு திரண்டுள்ள பிள்ளைகள் ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்தவர்களாக இருப்பினும் கண்டிப்பு ஒன்றே அவர்களை நல்வழிப்படுத்தும் என்று அண்ணாதுரை தமது உரையில் குறிப்பிட்டார்.
தவிர, அண்ணாதுரை “எழுதிய தனி ஒருவன் திருந்திவிட்டால் ….. “ எனும் நூல், ரத்னம், / டத்தோ பத்மநாதன் சுரேஷ் ஏற்பாட்டில் சுமார் 7 ஆயிரம் வெள்ளி புத்தகங்கள் நிகழ்விற்கு வந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த 85 பேருக்கும் ஆங் பாவ் அன்பளிப்பு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. .








