புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில் இயங்கி வந்த மரத்தாலான பொருட்கள் கடை மற்றும் வாசனைத் திரவியக் கடையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், அக்கடைகள் சுமார் 70 விழுக்காடு சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்து இரவு 10.58 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தகவல் கிடைத்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் செயல்பாட்டுப் பிரிவு கமாண்டர் விஜயன் மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தீவிபத்தின் உண்மையான காரணம் மற்றும் மொத்த நஷ்ட மதிப்பு குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் விசாரணைப் பிரிவு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








