- பிஎஸ்எம் கட்சி வருத்தம், ஏமாற்றம்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட அமைச்சவை சீரமைப்பில் இந்திய சமூகத்தை பிரதிநிதித்து ஒரு தமிழரை அமைச்சராக நியமிக்கப்படாதது? ஒரு பஞ்சாபியரான கோபிந்த் சிங்கை அமைச்சராக்கப்பட்டது, மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக வர முடியும் என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியது ஆகியவற்றை ஒரு சர்ச்சையாக்கப்பட்டு வருவது குறித்து மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் தனது வருத்தததையும் ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், நாம் இன்னமும் இன ரீதியான குறுகிய வட்டத்திற்குள்ளேயே போராடிக்கொண்டு இருக்கிறோம். மலேசியர் என்ற முறையில் நமது தாய் நாட்டை இனப் பேதங்கிளிலிருந்து எப்போது மீட்டெடுக்கப் போகிறோம் என்று பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவரும், மனித உரிமை போராட்டவாதியுமான எஸ். அருள்செல்வன் கேள்வி எழுப்பினார்.
கோபிந்த் சிங் டியோ அமைச்சராக்கப்பட்டதையும், லிம் கிட் சியாங் மலாய்க்காரர் அல்லாத ஒருவர் நாட்டிற்கு பிரதமராக வர முடியும் என்று கூறியதையும் சர்ச்சையாக்கப்பட்டு வருவது, தன் இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தங்கள் நலனை காப்பாற்ற முடியும் என்று மலேசியாவில் உள்ள இன ரீதியான குழுக்கள் இன்னமும் நம்பி கொண்டு இருப்பதையே இவை காட்டுகின்றன. இது அவர்களின் குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது என்று ஒரு பட்டதாரியான அருள்செல்வன் குறிப்பிட்டார்.
மலேசியராக இருப்பதற்கு பெருமைப்படுகிறோம் என்று கூறும் நாம், நாடு சுதந்திரம் பெற்ற 66 ஆண்டுகளுக்கு பின்னரும் இன ரீதியான பேதங்களையும், பிளவுகளையும் விதைத்து, சர்ச்சையாக்கப்பட்டு வருவது வேதனைக்குரியது என்று ஒரு பல்லினக் கட்சியான பிஎஸ்எம் மின் துணைத் தலைவர் கூறுகிறார்.
மலேசியாவில் ஒரு சிறுபான்மை இனத்தவர் பஞ்சாபியர்கள். அப்படி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் அமைச்சராக வர முடியாது, இந்தியர்களை பிரதிநிதிக்க முடியாது என்று நாம் வாதிட்டால், நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ள மலாய்க்காரர் அல்லாதவர்கள் நாட்டின் பிரதமராக வர முடியும் என்று நாம் எவ்வாறு வாதிட முடியும், அதனை வியக்கியாணம் செய்ய முடியும் என்று அருட்செல்வன் கேள்வி எழுப்பினார்.








