பாலிக் பூலாவ், பிப்ரவரி.15-
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக சுமார் 14 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், அதன் பலனைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் நிதியமைச்சும் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ரிங்கிட் வலுவடைவதால் இறக்குமதிச் செலவுகள் குறையும் என்பதால், அந்த விலைக்கழிவை நுகர்வோருக்கு வழங்குவதை உறுதிச் செய்ய இறக்குமதியாளர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.2 விழுக்காடாக உயர்ந்துள்ள நிலையில், இந்தச் சாதகமான சூழல் மக்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதுடன் பொருளாதார நிலைத்தன்மைக்கும் வலு சேர்க்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








