இந்தோனேசியாவின் மவுண்ட் அனாக் கிராகாதாவ் எரிமலை வெடிப்பால் உருவான எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்த்தா Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையத்தில், மலேசியா ஏர்லைன்ஸ், பாத்தேக் ஏர், ஏர் ஆசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மலேசியா-ஜகார்த்தா இடையிலான மொத்தம் 30-க்கும் மேற்பட்ட விமானங்களை இன்று ரத்து செய்துள்ளன.
தேசிய விமானச் சேவை நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் கோலாலம்பூர்-ஜகார்த்தா இடையிலான 12 விமானங்களை ரத்து செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது தொடர்பு விவரங்களை “மை புக்கிங்” பகுதியில் புதுப்பித்து, மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் விமான நிலவரங்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே பாத்தேக் ஏர் நிறுவனம் கோலாலம்பூர்-ஜகார்த்தா மற்றும் சுபாங்-ஜகார்த்தா இடையிலான 8 விமானங்களை ரத்து செய்துள்ளது.
விமானப் பாதையில் எரிமலைச் சாம்பல் இருப்பதால் பார்வைத் திறன் குறைதல், விமான வழிகாட்டி அமைப்புகளில் பாதிப்பு மற்றும் இயந்திர செயல்திறனில் சிக்கல் ஏற்படக்கூடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்து கிடைக்கக்கூடிய பாத்தேக் ஏர் விமானத்திற்குப் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விமான நிறுவனங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பயணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அறிவிப்புகளை வழங்கி வருகின்றன.








