பொண்டியன் , ஆகஸ்ட் 27-
கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், பொண்டியன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரே தமிழ்ப்பள்ளியான தேசிய வகை ஜாலான் பரித் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளியில், அரசாங்கத்தின் மின்னிலக்கக் கல்விக்கொள்கைக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக Microsoft Self-Access Learning Centre என்ற பெயரில் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஓர் அறை, அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.



இவ்விழாவில் சுமார் 80 க்கும் மேற்பட்ட சிறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இது இப்பள்ளிக்கு ஒரு சரித்திர நிகழ்வாகும்.
உலகஅளவில் 45 நாடுகளில் இருந்து பல அரசாங்கப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இந்த அங்கீகாரத்தைப்பெற விண்ணப்பித்த வேளையில் உலகளவில் 383 கல்வி நிறுவனங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பள்ளியும் அந்த அங்கீகாரத்தைப் பெற்றது


இந்த மாபெரும் அங்கீகாரத்தின் தொடர் நடவடிக்கையாகப் பள்ளியில் கற்றல் கற்பித்தல் முறைகளை மின்னியல் வழி நடைபெறுவதற்காக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு அதி நவீன அறை செவ்வன தயாராகி வெற்றிகரமாகத் திறப்பு விழா கண்டுள்ளது.
ஜாலான் பரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி, 2023-ஆம் ஆண்டு Microsoft நிறுவனத்தின் முன்மாதிரி தமிழ்ப்பள்ளியாக அனைத்துலக ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த அறைக்கு முதன்மையாக நன்கொடை கொடுத்த தம்போய், ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், / Smart Board வழங்கிய குலாய் ராகவேந்திர மன்றாலயம், இந்த அறை உருவாக்கப்படுவதற்கு உதவிய பொந்தியான் கிளை மஇகா, மற்றும் பல நல்லுள்ளங்கள் அனைவருக்கும் தலைமையாசிரியை திருமதி.வே.விக்னேஸ்வரி அவர்கள் ததமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த அறையைப் பொந்தியான் மாவட்ட கல்வி இலாகா அதிகாரி துவான் அஜி ரஹ்மான் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

மேலும், மைக்ரோசாஃப்ட் அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில கல்வி இலாகா அதிகாரிகள், சுற்றுவட்டார தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி வாரிய உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இத்திறப்புவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இக்கால மாணவர்கள் மின்னியல் கற்றலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை உணர்ந்து அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப ஆசிரியர்கள் பல சிறப்பான கற்றல் கற்பித்தலை நடத்தி வருவதாக பள்ளியின் கணினி ஆசிரியர் கார்த்திக் தெரிவித்தார்.











