கோலாலம்பூர், பிப்ரவரி.01-
மலேசிய சுற்றுலா ஆண்டு - TMM 2026-ஐ முன்னிட்டு நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் நாட்டின் கலாசாரம், மக்களின் உணர்வுகள், பண்பாட்டை மதிக்கும் வகையில் அமையும் எனத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி உறுதியளித்துள்ளார். பொதுமக்களிடையே கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள குறிப்பிட்ட சில நிகழ்வுகள், சர்ச்சைகளைத் தணிக்கும் வகையில் உரிய மாற்றங்களுடன் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்தின் Songkran விழாவைப் போன்ற நீர் இசைத் திருவிழாவை நடத்துவதற்கு எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஒவ்வொரு நிகழ்வும் அதன் இலக்குக் குழுவிற்கு ஏற்ப முறையாகத் திட்டமிடப்படும் என அவர் விளக்கமளித்தார்.
இன்று நடைபெற்ற 'சுற்றுலா ஆண்டு ஓட்டம்' - Visit Malaysia 2026 Run நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பல்வேறு இனங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றது மிகவும் ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார். இத்தகைய சிறப்பான விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் அனைத்துலகப் பயணிகளை ஈர்க்கவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.








