சுங்கைபூலோ, குவாசா தமன்சாரா மஞ்சள் வழித்தட எம்.ஆர்.டி ரயிலில் பயணித்த நபர் ஒருவர், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் விசித்திரமாக நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
சிவப்பு நிற சட்டையணிந்த அந்த நபர், ரயிலில் அமர்ந்திருந்தபோது திடீரென தனது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விசித்திரமான சத்தங்களை எழுப்பியுள்ளார். இதனால் அருகில் இருந்த இளைஞர் ஒருவர் அச்சமடைந்து அங்கிருந்து நகர்ந்து சென்றார். அடுத்த சில நிமிடங்களில், அந்த நபர் இருக்கையிலிருந்து கீழே விழுந்து தரையில் ஊர்ந்து செல்லத் தொடங்கினார்.
அனைவரையும் உறைந்து போகச் செய்யும் வகையில், ரயிலில் இருந்த பாதுகாப்பு இரும்புத் தூணை அவர் தனது பற்களால் கடிக்கத் தொடங்கியுள்ளார். மேலும், சக பயணிகளைப் பார்த்து விசித்திரமாகச் சிரிப்பது மற்றும் ஒருவிதமான அச்சுறுத்தும் ஒலிகளை எழுப்புவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த நபர் மதுபோதையில் இருந்தாரா அல்லது போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. "அவர் ரயிலில் ஏறுவதற்கு முன்பே மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார், இது பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது" என அந்த வீடியோவைப் பகிர்ந்தவர் பதிவிட்டுள்ளார்.








