கோலாலம்பூர், பிப்ரவரி.12-
கடந்த ஆண்டு நாடெங்கிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் 5,038 பகடி வதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 2,889 சம்பவங்கள் தொடக்கப் பள்ளிகளிலும், 2,149 சம்பவங்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று ஃபாட்லீனா தெரிவித்துள்ளார்.
பகடி வதைச் சம்பவங்களைக் கல்வியமைச்சு தீவிரமாகக் கருதுவதாகவும், இது போன்ற சம்பவங்களில் எந்த ஒரு சமரசமும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு தழுவிய நிலையில், 1,758 பள்ளிகளில், பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஃபாட்லீனா தெரிவித்துள்ளார்.
மேலும், அதிக ஆபத்துள்ள பகுதிகளைக் கண்காணிக்க 200 பள்ளி விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ அமைச்சு 3 மில்லியனை ஒதுக்கியதாகவும், இத்திட்டமானது கடந்த ஆண்டு நவம்பர் 19 -ஆம் தேதி நிறைவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டில், 333 விடுதியுடன் கூடிய பள்ளிகளில் சிசிடிவிகளை நிறுவுவதற்கு கூடுதலாக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அமைச்சு அங்கீகரித்துள்ளதாகவும் ஃபாட்லீனா தெரிவித்துள்ளார்.








