பிலிப்பைன்ஸை தளமாக கொண்ட Cebu Pacific Air விமான நிறுவனத்தற்கு சொந்தமான A320 ஏர்பஸ் விமானம் ஒன்று, 92 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் சிங்கப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, சபா, கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
பிலிப்பைன்ஸ், சிபு விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 7.55 மணிக்கு புறப்பட்ட அந்த ஏர்பஸ் விமானம், நள்ளிரவு 12 மணியளவில் சிங்கப்பூரில் தரையிறங்குவதற்கு அட்டவணையிட்டப்பட்டு இருந்தது. சிங்கப்பூரை சென்றடைவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரமே எஞ்சியிருக்கும் வேளையில் அந்த விமானத்தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டு பிடித்துள்ளார்.
இந்நிலையில் வேறுவழியின்றி அந்த விமானம், இரவு 10.22 மணியளவில் கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு இலக்கானது.
தகவல் கிடைத்து விமான நிலையத்தின் ஓடுபாதையின் இரு மருங்கிலும் தீயணைப்புப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்ததாக சபா தீயணைப்பு, மீட்புப்படை துணை இயக்குநர் Farhan Sufyan தெரிவித்தார்.








