பினாங்கு, தஞ்சோங் தோக்கோங் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட 27 வயது உள்ளூர் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தீமூர் லாட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரிண்டெண்டென் லீ ஸ்வீ செங் இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மருத்துவமனையிலிருந்து போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார். கெடா, லங்காவியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது காதலருடன் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி பினாங்கிற்குச் சுற்றுலா வந்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று காலை 9.30 மணியளவில், குளித்து முடித்துவிட்டு படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரது காதலர் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை பினாங்கு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் காலை 11.46 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
முதற்கட்ட சோதனையில் அந்தப் பெண்ணின் உடலில் காயங்களோ அல்லது குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளோ இல்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பிற்கான துல்லியமான காரணத்தை அறிய இன்று சவப்பரிசோதனை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.








