ரவாங், ஜனவரி.12-
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் 441.2 ஆவது கிலோமீட்டரில் சுங்கை புவாயாவிற்கும் ரவாங்கிற்கும் இடையே மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலையில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பில் விசாரணைக்கு ஏதுவாக 22 வயது பேருந்து ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிஃபின் முஹமட் நாசீர் தெரிவித்தார்.
அந்த பேருந்து ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் விளக்கினார்.
வலதுபுற பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்புச் சுவர் மீது மோதி, நெடுஞ்சாலையின் நடுவில் நின்றது. அதே திசையில் பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு லாரியும், மோட்டார் சைக்கிளும் பேருந்தின் இடது பக்கத்தில் மோதின.
இதில் ஒருவர் மரணமுற்ற வேளையில் ஒன்பது பேர் காயமுற்றனர் என்று ஏசிபி நோர் அரிஃபின் குறிப்பிட்டார்.








