கல்வி, பொருளாதாரம், சமூகவில் ஆகியவற்றில் ஒரு சிறந்த சமூகமாக, அதிகாரத்துடன் மலேசிய இந்தியர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால் அவர்கள் அரசியல் ஈடுபாடும், விழிப்புணர்வும் கொண்டு இருக்க வேண்டும் என்று மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டார்.
அரசியல் ஈடுபாடு என்றால் அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும், கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்பது அல்ல. நாட்டின் அரசியலின் என்ன நடக்கிறது என்பதை அணுக்கமாக கண்காணித்து வரக்கூடிய ஒரு சமூகமாக விளங்கிட வேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார்.
அரசியல் நிலவரங்களை அறிந்து வைத்திருக்கக்கூடிய ஒரு சமூகமாக ஒன்றுப்பட்டு இருந்தால் மட்டுமே தேசிய அரசியல் நீரோடையில் தங்களை பலத்தை காட்டக்கூடிய அதேவேளையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமூகமாக உயர முடியும் என்று டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார்.
நாட்டில் 7 விழுக்காட்டிற்கும் குறைவாக மக்கள் தொகையை கொண்ட இந்திய சமூகம் 3 விவகாரங்களில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு கல்விமானாகிய டாக்டர் சிவபிரகாஷ் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்தில் ஒரு மாற்றம் வேண்டுமானால் 20 லட்சம் இந்தியர்களும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை உடைந்து, பிளவுப்பட்டு இருக்குமானால் , பிரித்தாளும் கொள்கையின் மூலம் ஒரு பிளவுப்பட்ட சமூகமாகவே இந்தியர்களை தங்களின் அரசியலுக்கு இதர சமூகத்தினர் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று டாக்டர் சிவபிரகாஷ் எச்சரித்தார்.








