நாட்டில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் மொத்தம் 388 பாலியல் தொல்லை வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
போலீஸ் துறையின் புள்ளிவிவரங்களின்படி, இந்த வழக்குகள் 2022-ஆம் ஆண்டில் 477 ஆக இருந்து, கடந்த ஆண்டில் 1,038 ஆக உயர்ந்துள்ளது. இது குற்றங்கள் அதிகரித்ததை மட்டும் காட்டாமல், பாதிக்கப்பட்டவர்கள் மௌனம் கலைந்து புகார் அளிக்கும் விழிப்புணர்வை பெற்றுள்ளதையும் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலான சம்பவங்கள் பணியிடங்களிலும், பாதிக்கப்பட்டவருக்கு நெருங்கிய குடும்ப உறவுமுறை உள்ள நபர்களாலும் நிகழ்த்தப்படுகின்றன என்று கூறிய லிம் ஹுய் யிங், தன்மானம் மற்றும் வேலை இழப்பு பயம் காரணமாக பலர் இன்னும் புகார் அளிக்கத் தயங்குவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, பாலியல் தொல்லைக்கு எதிரான நடுவர் மன்றம் இதுவரை 100 புகார்களைப் பெற்று, அதில் 82 வழக்குகளுக்கு 60 நாட்களுக்குள் துரிதமாகத் தீர்வு கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை வழங்க 24 மணி நேரமும் செயல்படும் 'தாலியான் காசிஹ் 15999' என்ற பிரத்யேக உதவி எண் மற்றும் சமூக ஆதரவு மையங்கள் மூலம் அரசாங்கம் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி வருகிறது என்பதையும் அவர் விளக்கினார்.








